முஷாரப் விலகல்: பெரும் தடை நீங்கியது-பிலாவல்
அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகியுள்ளது குறித்து பிலாவல் கருத்து தெரிவித்துள்ளார். லண்டனில் படித்து வரும் 19 வயது பிலாவல் தனது தாயார் பெனாசிரின் சமாதி அமைந்துள்ள லர்கானாவுக்கு செல்வதற்காக பாகிஸ்தான் வந்துள்ளார்.
துபாயிலிருந்து கராச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் முஷாரப் விலகல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முஷாரப் விலகியுள்ளதன் மூலம் ஜனநாயக பாதையில் அடிபோட முடியாமல் இருந்த பாகிஸ்தானுக்கு பெரும் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. ஜனநாயகம், சர்வாதிகாரத்ைத பழி வாங்கி விட்டது.
அடுத்த அதிபர் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு காண முடியும் என நான் திடமாக நம்புகிறேன். சுதந்திரமான, சுயேச்சையான நீதித்துறையை உருவாக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்புகிறது. அந்த நோக்கில் நாங்கள் செயல்படுவோம்.
பாகிஸ்தானை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனது தாயார் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, நான் ஜனநாயகம் பழிவாங்கும் என்று கூறியிருந்தேன். இப்போது அது நடந்துள்ளது என்றார் பிலாவல்.
உறவில் பாதிப்பில்லை - ரஷ்யா:
முஷாரப் ராஜினாமா குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி அன்ட்ரேய் நெஸ்டர் ரென்கோ கூறுகையில், முஷாரப்பின் ராஜினாமாவால் பாகிஸ்தானுடனான ரஷ்யாவின் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த சில ஆண்டுகளாக இருநாட்டுக்கும் இடையில் பாசிடிவான செயல்பாடுகள் வலுபடுத்தப்பட்டன.
தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும், சர்வதேச மிரட்டல்களுக்கு எதிராகவும் இருநாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டுனான இதுபோன்ற உறவு தொடரும், வலுவாகும் என்று நம்புகிறோம் என்றார்.
பாக்.குக்கு நெருக்கடி காலம் - இங்கிலாந்து:
இங்கிலாந்து வெளியுறவு செயலர் டேவிட் மிலிபாண்ட் கூறுகையில், முஷாரப்பின் ராஜினாமா பாகிஸ்தானின் நெருக்கடி காலம் என்றுதான் கூற வேண்டும். இங்கிலாந்தின் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது.
சமூக சீர்திருத்தம், அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு அந்நாட்டில் சிறப்பாக உள்ளது. வலுவான மற்றும் ஜனநாயக அரசு அங்கு உள்ளது. முஷாராப்பின் ஆட்சியில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை உள்பட குறிப்பிடத்தக்க எந்த லாபமும் அந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்றார்.
ஆப்கன் மகிழ்ச்சி:
முஷாரப்பின் ராஜினாமாவை வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கன் பிரதமர் ஹமீத் கர்சாயின் அலுவலக அதிகாரி ஹூமாயூன் ஹமீத்ஸாடா கூறுகையில், ஆப்கனுக்கு நல்லவராக முஷாரப் நடந்து கொள்ளவில்லை. அவரது ராஜினாமா நல்ல பலனையே தரும்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆப்கன் பிரதமர் ஹமீத் கர்சாயி மீதான தாக்குதல், இந்திய தூதரகம் மீதான தாக்குதல்களில் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உள்ளது. ஆப்கன் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்ரார்.
வங்கதேசம் வரவேற்பு:
முஷாரப்பின் ராஜினாமா அந்நாட்டு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. அரசியல் விதிகளை மேம்படுத்தும் பொறுப்பை அந்நாடு மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் இப்திஹார் அஹ்மத் சௌத்ரி கூறியுள்ளார்.