மூத்த அதிகாரி செக்ஸ் டார்ச்சர்-'ரா' பெண் அதிகாரி தற்கொலை முயற்சி
மத்திய அரசின் அண்டர் செக்ரடரி ரேங்கில் உள்ளவரான நிஷா பிரியா பாட்டியா (49), ரா அமைப்பில் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாவார்.
இப்போது குர்காவ்ன் நகரில் உள்ள ராவின் பயிற்சி மையத்தில் இயக்குனராக உள்ளார். இவர் நேற்று பிற்பகலில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த ரா அதிகாரியை சந்திக்க முயன்றார். ஆனால், அதற்கு அனுமதி தரப்படவில்லை.
இதையடுத்து தனக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோஷமிட்டபடி திடீரென தான் கொண்டு வந்த விஷத்தைக் குடித்தார்.
இதையடுத்து அவரை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல் நிலை தேறி வருகிறது.
தன்னை மூத்த அதிகாரிகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாக்கி வருவதாக பாட்டியா ஏற்கனவே ராவை நிர்வகிக்கும் கேபினட் செக்ரடரியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கண் துடைப்பு விசாரணைகளே நடந்தன. இதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார் பாட்டியா.
நேற்று பிரதமர் அலுவலகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததையடுத்து கேபினட் செக்ரடரி அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பாட்டியா செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்தது உண்மை தான் என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது, புகார்கள் நிரூபணமாகவில்லை, இதனால் கடந்த மே மாதம் 19ம் தேதி விசாரணை முடிந்துவிட்டது. அதே நேரத்தில் தான் கொடுத்த புகாரை பாட்டியாவே வாபஸ் பெற்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடத்திய அதிகாரிகள் கமிட்டி அரசிடம் தந்த விளக்கத்தில், நிஷா பிரியா பாட்டியா தடுமாற்றமான மனநிலையில் உள்ளார் என்றும், அவருக்கு மருத்துவ கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாக கேபினட் செக்ரட்டரி அலுவலகம் கூறியுள்ளது.
இது தவிர, பாட்டியா மீது அதிகாரிகளுக்கு பணியாமல் நடப்பது, அதிகாரிகளை திட்டி எஸ்எம்எஸ் அனுப்புவது உள்பட பல புகார்கள் உள்ளதாகவும் கேபினட் செக்ரடரி கூறியுள்ளார்.
ஆனால், தான் கூறிய செக்ஸ் புகார் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு பாட்டியா வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அவருக்கு ஜாயி்ண்ட் செக்ரடரி ரேங்கில் உள்ள ஒரு அதிகாரி தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து புகார் கொடுத்த பின் அவருக்கு தொல்லை மேலும் அதிகமாகியுள்ளது. விஷம் அருந்தும் முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த நிருபர்களிடம் பாட்டியா கூறுகையி்ல்,
என் மூத்த அதிகாரியான ஜாயிண்ட் செக்ரடரி என்னை தன்னுடன் படுக்க அழைத்தார். ஹோட்டலுக்கு வந்தால் ரூ. 30,000 தருகிறேன் என்றார். இது குறித்து எனது செக்ரடரியிடம் புகார் தந்தபோது, அந்த புகாரி்ன் மீது அவர் இது போன்ற விஷயங்களில் என்னை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று குறிப்பு எழுதினார். அங்கு இது தான் நடக்கிறது.
மேலும் நான் செக்ஸ் தொல்லை புகார் தந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக எனக்கு தரப்பட்ட நெருக்கடிகள், டார்ச்சர்கள் சொல்லி மாளாது. என் தொலைபேசியை 1 வருடமாக ஒட்டுக் கேட்டு வருகின்றனர் என்றார் நிஷா.
ரா மீது புகார்கள் எழுவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாயிண்ட் செக்ரடரி அதிகாரியான ராமிந்தர் சிங் அமெரிக்காவுக்கு உளவு பார்த்து வந்தார். இந்திய ரகசியங்களுடன் அவர் அமெரிக்காவுக்கே தப்பியோடிவட்டார். அவரை இன்னும் பிடிக்க முடியவில்லை. அங்கு பெயரை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார், அமெரிக்க உளவுப் பிரிவின் துணையோடு.
ரா அதிகாரியான முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே.சிங், நிறுவனத்தின் நிதியை ஏராளமாக சுருட்டியதாக புகார் எழுந்தது.
மேலும் ராவின் முன்னாள் அதிகாரி ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் எப்படி கணக்கில் வராத பணத்தை ரா அதிகாரிகள் சுருட்டுகின்றனர், தங்கள் குழந்தைகளை ரா பணத்தில் வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர், எப்படி லாயக்கில்லாத பலர் ராவில் அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறித்தெல்லாம் புட்டுப் புட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
நிஷாவுக்கு ரேணுகா சௌத்ரி ஆதரவு:
இந் நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி, நிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
நிஷாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.
இதற்காக நிஷா நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிஷாவின் விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கையில் எடுத்து முடிந்ததை செய்வேன் என்றார்.