ஈழத் தமிழர்கள்: 40 எம்.பி.க்கள் இருந்தும்..டி.ஆர்
சென்னை: ஆறரை கோடி தமிழர்கள் இருந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது:
லட்சிய திமுக தொடங்கி, 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன்.
கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறினார்கள்.
அதனால், அவர் மன்னிப்பு கேட்டு, படத்தை அங்கு வெளியிட்டுள்ளார். ஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தில், ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தியது தமிழர்களின் குற்றம்.
இலங்கையின் வட மாநிலங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்குள்ள 4 லட்சம் மக்களில் 2 லட்சம் பேர் அகதிகள். அவர்களுக்கு சாப்பாடு, மருந்து எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்தையும் அங்கு கொண்டு போக முடியவில்லை. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.
மற்ற மாநிலத்தினர் இலங்கையில் இருந்து, அவர்கள் தாக்கப்பட்டால் சும்மா விடுவார்களா?. ஆறரை கோடி தமிழர்களால், 4 லட்சம் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க உணர்வில்லை.
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் நாங்கள் தான் என்கிறார்கள். நான் 25 வருடங்களாக அரசியலில் உள்ளேன். நாங்கள் தேர்தலில் நிற்கும்போது யாரையும் ஓட்டுபோடுங்கள் என்று கேட்கமாட்டோம். பிடித்திருந்தால் போடுங்கள் என்றுதான் சொல்வோம்.
பாமக பிரமுகர் காடுவெட்டி குரு மீது நடவடிக்கை எடுத்த திமுக, ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று பேசிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார்.