பழனி விபத்தில் 3 தம்பதி உள்பட 8 பேர் பலி
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாருதி வேன் மீது பஸ் மோதியதில் 3 தம்பதியினர் உள்பட 8 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் பங்காருசாமி. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இவரது மகள் கவிதா, கணவர் ரங்கராஜுடன் வசித்து வருகிறார். இவர்களது 3 வயது மகள் அக்சராவுக்கு பழனி அருகே உள்ள பொருளூரில் மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி பங்காருசாமி தனது மனைவி வசந்தாமணி மற்றும் உறவினர்களுடன் சென்றார். காது குத்து முடிந்ததும், அனைவரும் வேனில் அமராவதிக்கு கிளம்பினர்.
வேனை குருநாதன் ஓட்டி வந்தார். இதுதவிர ரங்கராஜ் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் 2 கார்களில் அமராவதிக்கு கிளம்பினார்.
வாகனங்கள் அனைத்தும் கொழுமம்கொண்டான் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு நகரப் பேருந்து குருநாதன் ஓட்டிச் சென்ற மாருதி வேன் மீது மோதியது.
இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் குருநாதன், அவரது தந்தை ராஜகோபால், பங்காருசாமி, மனைவி வசந்தாமணி, ரங்கநான், அவரது மனைவி சாரதா மணி, கிருஷ்ணசாமி, அவரது மனைவி ராஜாமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னால் சென்ற மாருதி வேன் விபத்துக்குள்ளாகி 8 பேரும் உயிரிழந்ததைப் பார்த்து பின்னால் வந்தவாகனங்களில் இருந்தவர்கள் கதறி அழுதனர்.
வேன் மீது பஸ் மோதியதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்புப் பணிகளுக்கு உதவினர். போலீஸாரும் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.