பொதுப் பணித்துறை இடத்தில் அரக்கோணம் நீதிமன்றம்
வேலூர்: அரக்கோணத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இடம் தேர்வு செய்யப்படும் பணி நடந்து வந்தது. இதையடுத்து பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகை அருகே 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை அமைச்சர் துரைமுருகன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், வெங்கட்ராமன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரக்கோணத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் போதிய வசதி இல்லாததால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்துத் தர வேண்டும் என்று அரக்கோணம் வழக்கறிஞர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று அரக்கோணத்தில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகை அருகே 2.3 ஏக்கர் நிலத்தை நானும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பார்வையிட்டு தேர்வு செய்துள்ளோம். விரைவில் அந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
தமிழகத்தில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டவும், நீதித்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டவும், இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நீதிமன்ற கட்டிடங்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றது என்றார்.