டீசல் தட்டுப்பாடு-விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: டீசல் தட்டுபாட்டை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீரென்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழுப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் உள்ளன. மீன்வளத்துறை மூலமாக மானிய விலையில் 90,000 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. வெளி பங்க்குகள் மூலமாக 20,000 லிட்டர் டீசல் கிடைக்கிறது.
கடந்த சில தினங்களாக நிலவி வரும் டீசல் தட்டுப்பாடு காரணமாக மீன்வளத் துறை வழங்கி வரும் டீசல் அளவு குறைத்து வழங்கப்படுகிறது. வெளியிடங்களிலும் போதுமான அளவுக்கு டீசல் கிடைப்பதில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கரையிலேயே முடங்கின. கடலுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையடுத்து, டீசல் தட்டுபாட்டை கண்டித்தும், போதிய அளவு டீசல் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் 260 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசைப்படகு சங்க செயலாளர் சேவியர் தாஸ் கூறுகையில், குறைவான டீசலை வைத்துக் கொண்டு கடலுக்கு எப்படி போக முடியும். சீசன் தொடங்கியுள்ளது. இப்போதுதான் நிறைய மீன் பிடிக்க முடியும். வருமானமும் கிடைக்கும். இந்த நிலையில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனே இதில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.