ஸ்பெயினில் விமானம் தீப்பிடித்து 153 பேர் பரிதாப சாவு
ஸ்பெயின் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான எம்டி-82 ரக விமானம் மாட்ரிட்டின் பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் கனாரியா தீவுக்கு கிளம்பியது.
விமானத்தில் பைலட்கள், பயணிகள் உள்பட மொத்தம் 178 பேர் இருந்தனர்.
ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம் கிளம்பி 600 அடியை தொட்ட நிலையில் மேலே பறக்க முடியாமல் தத்தளித்தது. அடுத்த சில விநாடிகளில் விமானத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ரன்வேயிலேயே அந்த விமானம் விழுந்தது.
விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் விமானம் மீது தண்ணீரைப் பாய்ச்சின. ஹெலிகாப்டர்களிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில் 153 பேர் கருகி இறந்து போயினர். 2 குழந்தைகள் உள்பட 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்டி-82 ரக விமானம் அமெரிக்காவில் தயாரானது என்பதால் விபத்து குறித்து விசாரிக்க அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புத்துறையில் இருந்து அதிகாரிகள் குழு ஸ்பெயின் விரைந்துள்ளது.