இந்தியாவில் ஐபோன்!-சென்னையில் உற்சாகம்!!
8 ஜிபி போனின் விலை ரூ. 31,000 என்றும், 16 ஜிபி வகை போன் ரூ. 36,000 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனைக்கு வந்துள்ளது. 19 ஆப்பிள் விற்பனையாளர்கள், ஏர் டெல் விற்பனை நிலையங்களில் இவற்றை வாங்கலாம். அதேபோல பார்தி, வோடோபோன் ஸ்டோர்களிலும் இவை விலைக்குக் கிடைக்கும்.
நள்ளிரவில் போன் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட பெரும் திரளானோர் போனை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராப்த ஆகிய நகரங்களில் ஐபோன் கருவிகள் கிடைக்கும். நாளை முதல் 65 நகரங்களில் இந்த வகை போன்கள் விற்பனைக்கு வருகின்றன.
சமீப காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கள்ளச் சந்தையில் இவை விற்பனையில் இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நேரடியாக மார்க்கெட்டுக்கு வந்துள்ளது ஐபோன்.
மற்ற செல்போன்களில் இல்லாத பல சிறப்பு வசதிகள் ஐபோனில் உள்ளன. ஆனால் விலைதான் மிகவும் ஜாஸ்தியாக உள்ளது. இருப்பினும் படிப்படியாக இது குறையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஐபோனுக்கு ஏர் டெல் நிறுவனம் 2 லட்சம் புக்கிங்களை பெற்றுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இத்தனை புக்கிங்குகளும் நடந்து முடிந்து விட்டன.
சென்னையில் உற்சாகம்:
சென்னையிலும் ஐபோனுக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது. இது எதிர்பாராத பிரமாண்ட வரவேற்பு என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை செயலதிகாரி ராஜீவ் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் முன்பதிவு செய்துள்ள 2 லட்சம் பேரில் 60 சதவீதம் பேர் சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.
ஜிபிஎஸ் மேப்பிங், அதி விரைவு வயர்லஸ் அக்சஸ், டெஸ்க்டாப் கிளாஸ் வெப் பிரவுசர், விரைவான டெளன்லோட், தெளிவான வீடியோ உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ஐபோனுக்கு ஏக கிராக்கியாகியுள்ளது.
சென்னையில் நடந்த ஐபோன் தொடக்க விழாவில் ஆற்காடு நவாப் முகம்மது அலி ஆசிப் கலந்து கொண்டு பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடமிருந்து முதல் போனை வாங்கிக் கொண்டார். நடிகர் பிரசன்னாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.