வன்முறை தொடர்ந்தால் சிங்கூரை காலி செய்வோம்: டாடா மிரட்டல்
கொல்கத்தா: சிங்கூரில் டாடாவின் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்தால் சிங்கூரை விட்டும் மேற்கு வங்கத்தை விட்டும் நாங்கள் போக நேரிடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ரத்தன் டாடா இன்று பேசுகையில், சிங்கூரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. எங்களது நானோ கார் தயாரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது இப்படியே நீடித்தால் நாங்கள் சிங்கூரையும், மேற்கு வங்கத்தையும் மறக்க நேரிடும்.
நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என யாராவது நினைத்தால் அது தவறு. சிங்கூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருவது எங்களை கவலைப்படுத்துகிறது. மேலும் எங்களது ஊழியர்களின் உயிருக்கும் ஆபத்து நீடிக்கிறது. எங்களது நிறுவன பாதுகாப்பு, அங்குள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சாதனங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.
நாங்கள் தேவையா, இல்லையா என்பதை மேற்கு வங்க மக்களும், கொல்கத்தா மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும். தாமதப்படுவதை விட சீக்கிரம் நடப்பது நல்லது என்றார் அவர்.