பூச்சி: பெப்ஸிக்கு ரூ.50000 அபராதம்
செங்கல்பட்டு: குளிர்பானப் பாட்டிலில் ஈக்கள், எறும்புகள் இறந்து கிடந்ததால் ரூ.50,000 அபராதம் செலுத்த பெப்ஸி நிறுவனத்திற்கு செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். கடந்த ஆண்டு ஜூன் மாதம், முள்ளிப்பாக்கம் கூட்ரோடில் தியாகராஜன் என்பவரின் கடையில் பெப்சி நிறுவன தயாரிப்பான மிராண்டா குளிர்பானம் 5 பாட்டில்களை வாங்கினார்.
அதில் ஒரு பாட்டிலில் ஈக்கள் மற்றும் எறும்புகள் இறந்து கிடந்தன. இது குறித்து அவர் கடைக்காரரிடம் கேட்டதற்கு, அவர் திருப்போரூர் ஸ்ரீஐயப்பா ஏஜென்சீஸிடம் குளிர்பானங்களை வாங்கியதாக கூறினார். இதையடுத்து குளிர்பானத்திற்கான தொகையை செலுத்தி பில் வாங்கினார் சாமுவேல்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு பெப்ஸி நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார். பெப்ஸி நிறுவனம் பதில் அளிக்காததால் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி கடைக்காரர், வினியோகஸ்தர் மற்றும் பெப்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் யாரும் ஆஜராகவில்லை, பதிலும் அளிக்கவில்லை.
அவகாசம் அளித்தும் எதிர்த்தரப்பினர் அலட்சியப்படுத்தியதால் மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு தரப்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், குளிர்பானப் பாட்டில்கள் சீலிடப்பட்டு விற்கப்படுவதால், சில்லறைக் கடைக்காரர் அதற்கு பொறுப்பல்ல, அதை கடைகளுக்கு வழங்கும் வினியோகஸ்தரும் பொறுப்பல்ல.
குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே பொறுப்பு. எனவே குளிர் பானம் அருந்துபவர்களுக்கு உடல் நலக்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் தயாரித்த பெப்ஸி நிறுவனம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.