டீசல்: தமிழகத்தில் தொடரும் தட்டுபாடு-'பிச்சை' போராட்டம்
நெல்லை: சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது சர்வதேச சந்தையி்ல் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும் தமிழகத்தில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெர்டோல், டீசலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், டீசல் விநியோகத்தை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் பல பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாரத், இஸ்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் டீலர்களுக்கு டீசலை குறைத்தே ஓதுக்கீடு செய்கின்றன.
ஒரு பங்கில் 10 லிட்டர் டீசலுக்கு 5 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொலைதூர பயணம் செய்பவர்கள் டீசல் இல்லாமல் பாதி வழியில் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
இதுகுறித்து டீலர்கள் சிலர் கூறுகையில், கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துவிட்டன. இதனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையிலும் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு முழுமையான ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே தட்டுபாடு நீங்கும் என்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. இவற்றில் 5 பங்குகள் மட்டுமே விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் வழங்குகிறது. கடந்த ஒரு வார காலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பங்குகளில் டீசல் விற்பனை படிப்படியாக குறைந்து கடந்த சில தினங்களாக அறவே நிறுத்தப்பட்டுவிட்டது.
மேலும் பல பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்று போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவில்பட்டி, விளாத்திகுளம், புதுக்கோட்டை, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பங்குகளில் விற்பனை அறவே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 20 நாட்களாகவே பங்குகளுக்கு வழங்கப்படும் டீசல் விநியோகம் குறைந்து விட்டது. தற்போது வாரத்திற்கு ஒரு முறைதான் டீசல் வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லாரி டீசல் வந்தால் கூர விற்பனை சீராக இருக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டை ஒருவாறு சமாளிக்க முடியும் என்றனர்.
டீசல் தட்டுப்பாட்டை கண்டித்தும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 20ம் தேதி ஸ்டிரைக் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல சென்னையில் குறைந்த அளவிலேயே டீசல் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் சப்ளை இன்னும் முழுமையாக இல்லாததால் சென்னையில் 4வது நாளாக டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.
ஒரு சில பங்குகள் டீசல் இருப்பு இல்லாமல் மூடப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கிறது. திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் பகுதிகளில் டீசல் வினியோகம் முழுமையாக இல்லை.
காஞ்சிபுரத்தில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். டீசல் பற்றாக்குறையால் லாரிகள் நிறுத்தப்பட்டதால் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பெட்ரோலிய அதிகாரி மோகன் நாயர் கூறுகையில், டீசல் தேவை 35 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டில் தேவைப்படும் டீசல் அளவை நாம் இந்த ஆண்டிலேயே எட்டி விட்டோம். இதை சமாளிக்க எண்ணை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக கூடுதலாக சப்ளை செய்து வருகிறது.
சுதந்திர தினம் விடுமுறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் ஏற்பட்ட தாமதத்தால் டீசல் வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று முதல் சீராகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைக்குள் நிலைமை முழுமையாக சரியாகிவிடும் என்றார்.
'டீசல் பிச்சை' போராட்டம்:
காஞ்சிபுரத்தில் டீசல் தட்டுப் பாட்டை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் நூதன முறையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் தீனன் கூறியதாவது:
டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாட்டை உடனே சீர் செய்ய வலியுறுத்தி லாரிகளை தள்ளி சென்று டீசல் பிச்சை எடுக்கும் போராட்டம் வரும் 25ம் தேதி நடத்தப்படும். "லாரியை தள்ள ஆட்கள் தேவை'' என்று வாசகங்கள் அடங்கிய அட்டையை பிடித்தவாறு காஞ்சிபுரம் நகரம் முழுவதும் ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.