இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி. போடும் 3 நிபந்தனைகள்!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான முதல் படியாக சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில், இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளிப்பது, இந்தியா கோரியுள்ள சலுகைகள் குறித்து பரிசீலிப்பது ஆகிய முக்கிய முடிவுகளை அணுப் பொருள் சப்ளை குழுமம் எனப்படும் என்.எஸ்.ஜி. நேற்று கூடியது.
இதற்காக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் என்.எஸ்.ஜி. குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெர்மனி மற்றும் மற்ற இரு முக்கிய நாடுகளிடம் இந்தியாவின் கோரிக்கை குறித்து விளக்கினார்.
மேனன் தலைமையிலான குழுவினர் நேற்று தொடங்கிய என்.எஸ்.ஜி. கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளிடம் விளக்கம் அளித்து பேசியது.
அப்போது, அணு ஆயுத விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்டு வரும் விதம், அது கடைப்பிடித்து வரும் சுய கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால் அது எந்த வகையிலும், உலகளாவிய அணு ஆயுதமற்ற சூழ்நிலையை பாதிக்காது என்றும் இந்தியா விளக்கியது.
மேலும், அணு எரிபொருளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ இந்தியா எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வதில்ைல என்பதையும் இந்தியக் குழு தெளிவுபடுத்தியது.
இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் என்.எஸ்.ஜி.உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிப்பது இது 2வது முறையாகும். கடந்த ஜூலை 18ம் தேதி மேனன் என்.எஸ்.ஜி. உறுப்பினர்களிடம் இதுகுறித்து விளக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தின்போது உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்கள், விளக்கங்களை எழுப்பினர். இவற்றுக்கு இந்தியாவின்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்தியாவுக்கு சலுகைகள் அளிக்க எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் நிபந்தனை விதிக்காமல் சலுகையை அளிக்கக் கூடாது என 20 நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் அணு மையங்களை ஐ.நா. ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும், அணு சோதனைகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும், என்.எஸ்.ஜி. சலுகைகளை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற முக்கிய நிபந்தனைகள் இந்தியாவுக்கு விதிக்கப்பட வேண்டும் என இந்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அம்சம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இவை எல்லாம் பூர்த்தி செய்யப்பட்ட பிறகே அணு வர்த்தகத்திற்கு இந்தியாவை அனுமதிக்கலாம் என இவை கூறியுள்ளன.
ஆனால் இந்தியா எந்தவிதமான நிபந்தனையும் இன்றி சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், இந்த சலுகைகளை நிபந்தனையின்றி அளிக்க முடியாது என நிபந்தனைக்கு வலியுறுத்தும் நாடுகள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் இன்றுடன் என்.எஸ்.ஜி. கூட்டம் முடிகிறது. கூட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா தனக்கென சுய கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கட்டுப்பாட்டை இந்தியா வகுத்துக் கொண்டுள்ளது.
மேலும் அணு தொழில்நுட்பத்தை யாருக்கும் அளிப்பதில்லை என்ற நிலையையும் இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவின் அணு கொள்கை மிகவும் தெளிவானது, வெளிப்படையானது. இதை என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறோம். நிபந்தனையற்ற சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார்.
என்.எஸ்.ஜி பச்சைக் கொடி காட்டி விட்டால் அடுத்து இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு செல்லும். அங்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றவுடன் ஒப்பந்தம் அமலுக்கு வரும். அனேகமாக செப்டம்பர் இறுதிக்குள் அனைத்தும் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது