நோன்புக் கஞ்சி அரிசி-முஸ்லீம் லீக் கோரிக்கை
சென்னை: ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கான அரிசியை எந்த சிக்கலுமின்றி இம்மாத இறுதிக்குள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று முஸ்லீம் லீக் தலைவர் எம்.பி.காதர் மொய்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரம்ஜான் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கும்போது குடிப்பதற்கு வழங்கப்படும் கஞ்சியை தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு
மலிவு விலை அரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு நோன்புக்காக, அரிசி பெறுவதற்காக பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் நிரப்ப முடியாத கேள்விகள் அடங்கிய தணிக்கை படிவம் வழங்கப்பட்டுள்ளதால் நிர்வாகிகள் செய்தவறியாது உள்ளனர். அதில் உள்ள பல கேள்விகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் நிரப்பப்பட வேண்டியதாகும் என்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பள்ளிவாசலின் நிர்வாகம் வக்ஃப் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதற்கு ஆதாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல்களால் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் எம்பியுமான கே.எம்.காதர் மொய்தீன் தென்காசியில் கூறியதாவது: பள்ளிவாசல்களுக்கான நோன்புக் கஞ்சி அரிசியை இம்மாத இறுதிக்குள் வழங்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு தொடங்க பத்து நாட்களே உள்ள நிலையில் நோன்புக் கஞ்சிக்குரிய மலிவு விலை அரிசியை கடந்த ஆண்டுகளை போல சிக்கலின்றியும் விரைவாகவும் பள்ளிவாசல்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டுமென்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.