ஒலிம்பிக்-4 ஹரியாணா வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி
சண்டிகர்: ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நான்கு வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என ஹரியாணா மாநில அரசு தெரிவித்துள்ளது.
குத்துச்சண்டையில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்ற விஜேந்தர் குமார், காலிறுதி வரை முன்னேறிய ஜிதேந்தர் குமார், அகில் குமார், மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முன்னேறிய யோகஷ்வர் தத் ஆகியோர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நான்கு பேரையும் கெளரவிக்க ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று குத்துச்சண்டை வீரர்களுக்கும், மல்யுத்த வீரர் தத்துக்கும் டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும்.
மேலும் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜகதீஷ் சிங்குக்கு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசும், அகில் குமார், ஜிதேந்தர் குமார், யோகேஷ்வர் தத்துக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என ஏற்கனவே ஹரியாணா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.