கருணாநிதி பிறந்தநாள்-வேலை வாய்ப்பு முகாம்
வேலூர்: வேலூர் மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட திமுக சார்பில், செப்டம்பர் மாதம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்கான இடத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு விழாக்களாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்.
இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்களான நோக்கியா, டிவிஎஸ், டிசிஎஸ், காக்னிசென்ட் உட்பட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒரே இடத்திற்கு வரவழைத்து அவர்களிடமிருந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் இந்த விழாவின் நோக்கமாகும்.
இந்த முகாம் செப்டம்பர் மாதம் காட்பாடியில் நடத்தப்படும். இதற்காக இந்த மாதம் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் வேலூர், ஆம்பூர், அரக்கோணம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய ஆய்வுகள் செய்யப்படும்.
பெறப்பட்ட மனுக்களில் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த முகாமில் 15,000 மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர்.