மது கோடா ராஜினாமா - ஆட்சி அமைக்க சோரன் மும்முரம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்.எல்.ஏவான மது கோடா தலைமையில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு பதவியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பரிசாக ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று சிபு சோரன் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். மேலும் மது கோடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர் விலக்கிக் கொண்டார்.
இதையடுத்து 25ம் தேதி மது கோடா அரசு தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சையத்சிப்தி ரஸி உத்தரவிட்டார். அதை மது கோடாவும் ஏற்றார்.
இந்த நிைலயில் நேற்று தனது பதவியை கோடா ராஜினாமா செய்தார். டெல்லி சென்றிருந்த கோடா நேற்று பிற்பகல் ராஞ்சி திரும்பினார் பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவருடன் சுயேச்சை எம்.எல்.ஏக்களான துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி, ஜோபா மஜ்ஹி, வந்தரா பிரகாஷ் செளத்ரி, பானு பிரதாப் சாஹி, ஹரிநாராயண் ராய் ஆகியோரும் சென்றனர். அனைவருமே அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடா அரசு ராஜினாமா செய்துவிட்டதைத் தொடர்ந்து சிபு சோரன் ஆட்சி அமைக்க மும்முரமாகியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாக பாஜக (26 எம்.எல்.ஏக்கள்) விளங்குகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9எம்.எல்.ஏக்களும், சிபு சோரனுக்கு 17 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதாதளத்தசற்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.