நானோ தொழிற்சாலயை அமைக்க டாடாவுக்கு பஞ்சாப் அழைப்பு
சண்டிகர்: மகாராஷ்டிரா, ஒரிசாவைத் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் நானோ கார் ஆலையை தங்களது மாநிலத்தில் அமைக்க வருமாறு பஞ்சாப் அழைப்பு விடுத்துள்ளது.
டாடா நிறுவனம் நானோ காரை தயாரிக்க மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் நகரில் தொழிற்சாலையை அமைந்துள்ளது. ஆனால், இந்த தொழிற்சாலைக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் உற்பத்தியை தொடங்க முடியாத நிலைக்கு டாடா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. வெறுப்படைந்த டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா, தொழிற்சாலையை மேற்கு வங்கத்தை விட்டே வேறிடத்துக்கு மாற்றிவிடுவோம் என எச்சரித்தார்.
ஆனாலும், மம்தா விட்டுத் தரும் நிலையில் இல்லை. டாடாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆலையை மகாராஷ்டிரத்தில் தொடங்குமாறு டாடா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார் அம் மாநில முதல்வர் விலாஸ்ராவ்.
டாடாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க நாங்கள் தயார். அவர் கேட்கும் நிலம், வசதிகளை நாங்கள் தரத் தயாராக உள்ளோம் என்று தேஷ்முக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் டாடாவுக்கு அழைப்பை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கூர் தொழிற்சாலையை அமைக்க ரூ. 1,500 கோடி வரை செலவு செய்துவிட்டது டாடா நிறுவனம் என்பது நினைவுகூறத்தக்கது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நானோ கார் ஆலையை அமைக்குமாறு டாடா நிறுவனத்திற்கு பஞ்சாப் மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பஞ்சாப் அரசு அணுகியுள்ளது. நானோ ஆலையை அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் அது உறுதியளித்துள்ளதாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சம்மதம் தெரிவித்தால் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தரவும் பஞ்சாப் அரசு தயாராக உள்ளதாம்.