தமிழகத்தில் 3வது அணி அமைப்போம்: சிபிஎம் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர். உமாநாத், டி.கே. ரங்கராஜன், டபிள்யூ.ஆர். வரதராசன், ஏ.கே. பத்மநாபன், ஜி. ராம கிருஷ்ணன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் வருமாறு:
இடதுசாரிகள் மத்திய அரசின் அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டை எதிர்த்தது இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்கும், ஹைடு சட்டம் உட்பட அமெரிக்க நாட்டின் சட்டங்களுக்கு இந்திய நாட்டை கட்டுப்படுத்தி - அடகு வைக்க முற்பட்டதை தடுக்கவுமே என்பதை நாடறியும். இந்த உடன்பாட்டை செயல்படுத்த விடாமல் தடுப்பதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கட் சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து, அவரது தலையீட்டை கோரினர்.
ஒரு கட்டம் வரை இடது சாரிகளின் இந்த நியாயமான நிலைபாட்டை ஆதரித்த தமிழக முதல்வர் அதைத் தொடராமல் கைவிட்டது ஏன் என்பது புதிராகவே உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் எடுத்துள்ள அரசியல் நிலைபாடுகள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர் வினையாக எழுந்தவை. இந்தப் பின்னணியை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசியல் நிலைமையை தனிமைப்படுத்திப் பார்ப்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.
எனவேதான், அண்மையில் தமிழக முதலமைச்சர் வகுப்புவாதத்திற்கு எதிராக 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உருவான அதே அரசியல் உறவுகள் தொடர வேண்டும் என்ற விழைவை தெரிவித்தபோது, அது இன்றைய நிலைமையில் சாத்தியமில்லை என்றும், காங்கிரசா - இடதுசாரிகளா, யாருடன் அரசியல் உடன்பாடு என்பதை தி.மு.க. தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் சி.பி.எம் தெளிவுபடுத்தியது.
கருணாநிதி கவிதை-நாகரிகமற்றது:
இப்பின்னணியில், தி.மு.க. தரப்பிலிருந்து வந்துள்ள கடுமையான அவதூறு களும், அமைச்சர்களின் தரமற்ற விமர்சனங்களும், தமிழக முதலமைச்சர் எழுதி வெளியிட்ட கவிதையும் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக அமைந்துள்ளன. அரசியல் ரீதியாக உடன்பாடு கொள்ளுகிற கட்சிகள் சமநிலையில் பரஸ்பரம் கருத்தொற்றுமையுடன் முடிவுகளை மேற்கொள் கின்றன. இவற்றை ஒரு கட்சி தருவதாகவும், இன்னொரு கட்சி கையேந்திப் பெறுவதாகவும் சித்தரிப்பது என்பது நாகரிக மாகாது!
மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரிகள் வெளி யிலிருந்து ஆதரவு தந்து, அமைச்சரவையில் பங்கு கொள்ளாததன் காரணமாகவே தமிழகத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் அமைச்சர்கள் மத்திய அரசில் இடம்பெற முடிந்தது என் பதும் நினைவுகூரத்தக்கது. எனவே, சில பதவிகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை கொச்சைப்படுத்த தி.மு.க. முற்பட்டிருப்பது அநாகரிகமானது.
அண்மையில், கடலூரிலும், விழுப்புரம் ரெட்டணையிலும் காவல்துறையின் அத்து மீறிய நடவடிக்கைகள் குறித்து சிபிஐஎம் கண்டனம் தெரிவித்ததும், தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அங்கு நடைபெற்ற போராட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
கடலூர் - ரெட்டணையில் அப்பாவி மக்கள் மீது காவல்துறை கடிவாளமற்ற குதிரையாக பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இதை மேற்குவங்கம் நந்திகிராமத்தில், ஆயுதமேந்திய அரசியல் எதிரிகள் திட்ட மிட்டு மாதக்கணக்கில் நீடித்த கொலை வெறித் தாக்குதல் சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளது முறையற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை எந்தக் கட்டத்திலும் வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் அமைந்த காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை பா.ஜ.க.வும் - காங்கிரசும் கைகோர்த்துதான் கவிழ்த்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இப்போதும், வகுப்புவாத பாஜகவுக்கு இடமளிக்கிற எந்த போக் கையும் சிபிஐஎம் கடைப்பிடிக்கவில்லை.
கண்ணியம் கெட விரும்பவில்லை:
இந்நிலையில், கருத்து வேறுபாடுள்ள அரசியல் பிரச்சனைகளில் ஜனநாயக மரபு களுக்கு உட்பட்டு கண்ணியம் கெடாத வகையில் விவாதங்களை தொடரவே சிபிஐஎம் விழைகிறது. தமிழகத்திலும், பாஜக - காங்கிரஸ் அல்லாத ஒரு மூன்றாவது மாற்றை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.