எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை - பெங்களூரில் 3 ரவுடிகள் கைது
சென்னை: எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் பிரபல ரவுடி கருப்பு பாலு உள்பட 3 பேரை பெங்களூரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன். ராமாபுரம் தோட்டத்தில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் கோட்டூர்புரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மீதான விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி எஸ்பி முகமதுகான் தலைமையில் இன்ஸபெக்டர் வெங்கடேசன் உள்பட போலீஸார் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். விஜயனின் கார் டிரைவர், 50க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கூலிப்படை வைத்து விஜயம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார் பிரபல ரவுடி கருப்பு பாலு உள்பட பலரை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் ரவுடி கருப்பு பாலு மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பெங்களூர் விரைந்து தேடுதல் வேட்டை நடத்தியது.
இதில் கருப்பு பாலு, கூட்டாளிகள் பாண்டியன், சதீஷ், தீல் ஆகியோரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.