திண்டிவனம்: சிலிண்டெர் லாரி கவிழ்ந்து கேஸ் கசிவு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே காஸ் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து, அதிலிருந்து காஸ் கசிந்ததால் பீதி ஏற்பட்டது. 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிரேன் மூலம் அந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து மதுரைக்கு 17,460 டன் எடையுள்ள சமையல் காஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று, நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள பைபாஸ் சாலையில் திரும்பியபோது திடீரென்று லாரி கவிழ்ந்தது.
இதையடுத்து லாரியில் இருந்து சமையல் காஸ் லேசாக கசிய தொடங்கியது. உடனே லாரி டிரைவர் அன்பழகன், கிளீனர் சம்பத் ஆகியோர் லாரியை விட்டு இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் இருந்து காஸ் கசிவதை தடுக்க மணல் மூட்டைகளை போட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் காஸ் கசிவை தடுக்க முடியவில்லை.
காஸ் கசிவு நிற்காததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து காஸ் கசிவு அதிகமானதால் திண்டிவனத்தில் பெரும் பகுதி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
ஜக்காம்பேட்டை காலனி, சிங்கனூர் புதுகாலனி உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் அடுப்பு மற்றும் சமையல் காஸ் பற்ற வைக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் பயந்துபோன அப்பகுதியினர், அருகில் இருந்த விவசாய நிலங்களில் தஞ்சமடைந்தனர்.
புதுச்சேரி, செங்கல்பட்டில் இருந்து மாற்று கண்டெய்னர் லாரிகள் வரவழைக்கப்பட்டு காஸ் மாற்றம் செய்யப்பட்டது. பெங்களூரில் இருந்தும் லாரி வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து முழுவதுமாக காஸ் மாற்றப்பட்டது. இந்த பணி நேற்று காலை 6 மணி வரை நடைபெற்றது. மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் காஸ் வெளியேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த மீட்பு குழுவினர் கிரேன் மூலம் அந்த காஸ் லாரியை தூக்கி நிறுத்தினர். அதன் பின்னர் 24 மணி நேர போராட்டமும், பீதியும் முடிவுக்கு வந்தது. திண்டிவனம், ஜக்காம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.