'மாஜி' செல்வகணபதி அதிமுகவில் இருந்து நீக்கம்
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ. 10.61 கோடி கலர் டிவி ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல், சுடுகாடுகளுக்கு கொட்டை அமைப்பதில் ஊழல் ஆகியவற்றில் ஜெயலலிதாவோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தான் இந்த செல்வகணபதி.
பின்னர் சேலத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடித்து எம்பியாகவும் ஆனார். ஆனால், பல காலமாக இவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார். இதனால் தேமுதிக அல்லது திமுகவுக்கு இவர் தாவலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந் நிலையி்ல் தான் அவரை நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது தான் ஜெ பாணி- செல்வகணபதி:
இது குறித்து செல்வகணபதி கூறுகையில், அதிமுகவில் இது ஒன்றும் புதியதல்ல. இந்த இயக்கத்தில் கடுமையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுவதும், ஒதுக்கி வைக்கப்படுவதும், ஏன் நீக்கப்படுவதும் ஜெயலலிதாவின் அரசியல் பாணி தான் என்றார்.