மீனவர்கள் மீது இனி தாக்குதல் இருக்காது: எம்.கே.நாராயணன்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தாது என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.
பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னையில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் வெளியில் வந்த எம்.கே.நாராயணன் கூறியதாவது:
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த முதல்வர் கருணாநிதி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் நடத்தும் தாக்குதல் குறித்து விளக்கினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொண்டார்.
இலங்கை படையினரிடம் தமிழக மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை விரிவாக கடிதம் மூலம் பிரதமருக்குத் தெரிவித்தார்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்த கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஒன்றாம் தேதி அன்று அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவே சந்தித்தார். அப்போது தமிழக மீனவர்கள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளை ராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துக் கூறினார்.
அந்த சந்திப்பு தொடர்பான விஷயங்களை முதல்வரிடம் விரிவாக கூறவே அவரை சந்திக்க வந்தேன். மன்மோகன்-ராஜபக்ஷே சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த நாள், இலங்கை அரசு உயரதிகாரிகளை நானும், பாதுகாப்புத் துறை செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.
இதில் தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்த பேச்சுதான் முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த இரண்டு சந்திப்புகளைத் தொடர்ந்து பல நல்ல முடிவுகளை இலங்கை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். அதையும் முதல்வர் கருணாநிதியிடம் கூறியுள்ளேன். அதை அனைத்தையும் இங்கே சொல்ல முடியாது.
தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது, தமிழக மீனவர்கள் பிடிபட்டால், அவர்களை முடிந்தவரை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு எங்களிடம் உறுதி அளித்துள்ளது என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கூற வேண்டுமானால், ஓரிரு தனிப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறலாம். ஆனால் அதை வைத்து அனைத்தும் கணக்கில் கொள்ள முடியாது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
கச்சத்தீவு மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். சர்வதேச ஒப்பந்தங்களை நினைத்த நேரத்தில் மாற்ற முடியாது. ஆனால் தமிழக மீனவர்களுக்கு அங்கு மீன்பிடிப்பது போன்ற பாரம்பரிய உரிமைகளை மீட்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அணுபொருள் சப்ளை செய்யும் நாடுகள், வியன்னா மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. இந்த விஷயத்தில் நல்லதே நடக்கும் என்று நினைப்போம். சிமி இயக்கம் தடை செய்யப்பட்டதை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அதை பற்றி உயர்மட்ட அளவில் கலந்தாலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள் முடியும்.
அமர்நாத் விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் தடையை மீறி சிலர் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை அரசு சரியாக கையாண்டு வருகிறது. அங்கு அமைதி ஏற்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.