வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன் மணல் அள்ளுவது தனியார் வசம் இருந்தது. அவர்கள் கண்மூடித்தனமாக அள்ளியதால் ஆற்றுப் படுகைகள் காலியாயின, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது.
மேலும் மணலை பல மாநிலங்களிலும் விற்றதால் தமிழகத்தில் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விலையும் கடுமையாக உயர்ந்தது.
இதையடுத்து 2003ம் ஆண்டு அக்டோபர் முதல் மணல் விற்பனையை அரசே கையில் எடுத்தது. தனியார் குவாரி குத்தகைகள் ரத்து செய்யப்பட்டன.
பொதுப்பணித்துறையின் கண்காணிப்பின் கீழ் 239 இடங்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணலை சட்டவிரோதமாக அள்ளுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பல இடங்களில் கள்ளத்தனமாக மணல் அள்ளப்பட்டுத்தான் வருகிறது.
சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் அள்ளிச் செல்வதற்காக நின்று கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இந் நிலையில் வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியில் 38-பி என்ற பிரிவை தமிழக அரசு புதிதாக சேர்த்துள்ளது. இதன்படி தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனிமேல், வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லும் லாரிகள் முடக்கப்பட்டு, மணல் பறிமுதல் செய்யப்படும். லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.