இலங்கைக்கு போதை மருந்து கடத்தல்-3 பேர் கைது
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் ஜான்பால், மாரிமுத்து, வினோத் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீஸார் சோதனை செய்தனர். அவர்களிடம் அரை கிலோ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. விசாரித்தபோது இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த போதைப் பொருள், பைக், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று போலீஸார் தெரிவித்தனர்.