For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்துக்காக திமுக-தோழிக்காக அதிமுக: விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தமிழகத்தில் குடும்பத்துக்காக ஒரு கட்சியும், தோழிக்காக ஒரு கட்சியும் இயங்கி வருகின்றன. ஆனால், தேமுதிக மக்களுக்காக நடத்தப்படும் கட்சி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் பொறுப்பு வகித்து, தற்போது தேமுதிக வட்ட அவைத் தலைவராக இருப்பவர் தொண்டர் சிவா.

சென்னை அசோக் நகர் புதூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசி்க்கும் இவருக்கும் சர்மிளா தேவிக்கும் தனது செலவில் விஜயகாந்த் இன்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

அந்த திருமண நிகழ்ச்சியில் விஜய்காந்த் பேசியதாவது:

எனக்காக உழைக்கும் என் கட்சி தொண்டர்களின் வீட்டில் கால் வைப்பது எனக்கு மிக மிக சந்தோஷம். இந்த கல்யாண செலவை முழுவதுமாக ஏற்பதாக கூறினேன். அதோடு சீர்வரிசையை நான் செய்கிறேன் என்றபோது, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உங்களோடு சேர்ந்து நாங்களும் செய்கிறோம் என்றனர்.

அது எனக்கு மிக மிக சந்தோஷம் அளித்தது. இங்கு பேசியவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று பேசினார்கள். அவ்வாறு பேசுவது எனக்கு பிடிக்காது. நான் ஜாதியே கிடையாது என்று நினைப்பவன். ஏதோ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில் பிறந்து விட்டோம். இனிமேல் ஜாதி குறித்து யாரும் பேசக் கூடாது.

ஜாதியை தூண்டிவிட்டு அதில் சிலர் குளிர் காய்வார்கள். எனக்கு அது பிடிக்காது. இந்த நாடு நிம்மதியாக இருக்க வேண்டும். நிம்மதியான வாழ்க்கை வேணும்.

தற்போது நாட்டில் விலைவாசி அதிகமாக உயர்ந்துள்ளது. குறைந்த விலைக்கு அரிசியே கிடையாது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கிடையாது. விலைவாசியை குறைக்க முடியும் என்று நாம் சொன்னால், அதற்கு முதல்வர் யோசனை சொல்லுங்கள் என்கிறார். இதற்காகவா நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள்?

முதலமைச்சருக்கு தேவை என்றால் நன்றாக பேசுவார். அவருக்கு தேவையில்லை என்றால் உடனே ஜாதியை இழுப்பார். அதே போல் அவருக்கு ஜால்ரா போட்டால் பாராட்டுவார். யாராவது குறையை சுட்டிக்காட்டினால் ஜாதியை பயன்படுத்தி பேசுவார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுபவர்தான் நம்நாட்டு முதலமைச்சர்.

மலேசியாவில் வறுமை கிடையாது. ஹாங்காங்கில் மின் தட்டுப்பாடு இல்லை. ஆனால் இவர்கள் உலக நாடுகளில் விலைவாசி ஏற்றம் என்கிறார்கள் அது பொய். முதலில் அறிவிக்கப்படாத மின்வெட்டு வந்தது, இப்போது அறிவித்த மின்வெட்டு. 4 மாதமாக கிராமங்களில் மின்சாரமே இல்லை. இதற்கு ஒரு அமைச்சர் தேவைதானா?.

ஜெயலலிதா ஆட்சியில் மின் தேவை சரி செய்யப்படவில்லை என்கிறார்கள். இப்போது நீங்கள் வந்து 2 வருடமாகிறது. அதை சரிசெய்ய வேண்டிதானே? அதைவிட்டுவிட்டு எப்போது எதில் கொள்ளையடிக்கலாம் என்று, அங்கே இங்கே பாலத்தை கட்டி கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்த அரசை மக்கள் தூக்கியெறியும் நாள் கூடிய சீக்கிரம் வரத்தான் போகிறது.

மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும். நானும், என் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கை நடத்துகிறோம். நான் செய்யும் உதவிகளை என் மனைவி ஊக்கப்படுத்துவார்.

நாம் ஆரம்பித்துள்ள இலவச கணிப்பொறி பயிற்சி மையம் பலர் பயன்பெற்று வருகிறார்கள். விருத்தாச்சலம் தொகுதியில் மந்தாரகுப்பத்தில் மிகப்பெரிய இன்னொரு கணிப்பொறி பயிற்சி மையத்தை துவக்க இருக்கிறேன். இதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இடம் கொடுப்பவர்களை மிரட்டுகிறார்.

இந்த மிரட்டலை மீறி ஒருவர் இடம் கொடுத்ததையடுத்து கணிப்பொறி மையம் திறக்கப்பட இருக்கிறது. திமுக என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா. அதில் வரும் முதல் எழுத்து 'தி' என்பது முதலமைச்சர் பிறந்த ஊரான திருக்குவளை, 'மு' என்பது கருணாநிதியின் தந்தை பெயர் முத்துவேலரை குறிக்கிறது. 'க' என்பது கருணாநிதியின் பெயரை குறிக்கிறது. ஆனால் நம்முடைய தேமுதிக யார் பெயரையும் குறிக்காமல் பொதுவானது.

நான் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டேன். இந்த 2 கட்சிகளும் ஊழல் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். அதிமுக கோட்டை முதல் சுடுகாடு வரை ஊழல் செய்தது. திமுக கோட்டை முதல் சாம்பல் வரை ஊழல் செய்கிறது.

வரும் தேர்தலில் திமுக ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்க இருப்பதாக தகவல் வருகிறது. அது அவர்களின் சொந்தப் பணம் அல்ல. கொள்ளையடித்த பணம்தான். அதனால் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒட்டுப் போடும்போது எனக்கு போடுங்கள். அதாவது அவர்கள் கொடுக்கும் பணம் உங்களுக்கு, ஓட்டு எனக்கு.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம்மிடம் இருப்பதை அனைத்தையும் உருவிவிடுவார்கள். அறிவு வளர்வதற்காக இலவச டிவி கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் அரசு கேபிள் டிவியில் இந்த இலவச டிவிக்கு ஏன் பணம் வாங்குகிறார்கள். அதையும் இலவசமாக கொடுக்க வேண்டிதானே? திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

சில நாட்களுக்கு முன் 65 பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சொட்டு மருந்து சரியில்லை என்கிறார்கள். மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா?.

ஒருத்தர் தோழிக்காக கட்சி நடத்துகிறார். இன்னொருத்தர் குடும்பத்திற்காக கட்சி நடத்துகிறார். நான் மக்களுக்காக கட்சி நடத்துகிறேன். திமுகவும், அதிமுகவும் ஆளுக்கொரு டிவி வைத்துக் கொண்டு பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இது திருமண வீடு என்பதால் மிகக் குறைவாக நான் அரசியல் பேசுகிறேன்.

இளைஞர்களே நீங்கள் வரதட்சணை வாங்காதீர்கள். நான் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தேன். நீங்கள் இப்போது வரதட்சணை வாங்கினால் நாளை உங்கள் குழந்தைகளுக்காக வரதட்சணை கொடுப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்றார் விஜய்காந்த்.

விழாவில் ஒரு பெண் குழந்தைக்கு தனது மனைவியின் பெயரான பிரேமலதா என்றும், மற்றொரு பெண் குழந்தைக்கு
விஜயலட்சுமி என்றும், ஆண் குழந்தைக்கு விஜயராஜ் என்றும் (இது தான் விஜய்காந்தின் ஒரிஜினல் பெயர்), மற்றொரு ஆண் குழந்தைக்கு ரமணா (விஜய்காந்த் நடித்த படம்) என்றும் விஜயகாந்த் பெயர் சூட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X