மிரட்டல்: அமைச்சர் சாமி மீது போலீஸில் வழக்கு
சென்னை: மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி மீது ரியஸ் எஸ்டேட் அதிபர் போலீஸில் புகார் செய்துள்ளார். ஆனால் இந்த புகாரை அமைச்சர் சாமி மறுத்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, ரியல் எஸ்டேட் அதிபர். இவர் அமைச்சர் சாமி மீது போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், நெமிலி கிராமத்தில் உள்ள பொது இடத்தை விற்றது தொடர்பாக எனக்கும் நில புரோக்கர் குமார் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி காலை அமைச்சர் சாமி பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு ஒருவர் என்னுடைய மொபைல் போனில் பேசினார். நிலப் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். குமாரிடம் இனி எந்த பிரச்சனையும் செய்யாதீர்கள். மீறி பிரச்சனை செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டினார்.
அமைச்சரே இந்த பிரச்சனையில் தலையிட்டு என்னை மிரட்டி இருப்பது எனக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அமைச்சர் சாமி, நில புரோக்கர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரை பதிவு செய்த போலீஸார், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாமல்லபுரம் டிஎஸ்பி பாலசுப்ரமணியம் கூறுகையில், தண்டபாணி கொடுத்த செல்போன் எண்ணை இன்ஸ்பெக்டர் வேளியப்பன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைச்சர் சாமியின் பிஏ அந்த போனை அட்டன் செய்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, அதுபோன்று அமைச்சர் யாரிடமும் பேசவில்லை என்று பிஏ தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார் டிஎஸ்பி.
ஈரோடு மாவட்டத்தில் பழனிச்சாமி அவரது மனைவி மலர்விழி கடத்தப்பட்ட புகாரில் சிக்கிய ராஜாவிடம் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல சப்-கலெக்டர் தாக்கப்பட்ட வழக்கில் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக மற்றொரு அமைச்சர் சாமி மீது புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, அமைச்சர் சாமியும், அவரது தம்பியும் தங்களுக்கு ஓட்டுப்போடாத மீனவர்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் கூறப்பட்டது.
பொய் குற்றச்சாட்டு-சாமி விளக்கம்:
இதற்கிடையே ரியல் எஸ்டேட் அதிபரை நான் மிரட்டியதாக வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்று அமைச்சர் சாமி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தண்டபாணி என்பவரை மிரட்டியதாக வெளி வந்துள்ள தகவல்கள் பொய்யானவை. தண்டபாணி, குமார் ஆகியோர் யார் என்றே எனக்குத் தெரியாது. தண்டபாணி என்பவரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளிவந்துள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை.
இந்த செய்தியை அறிந்த உடன் முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் க.அன்பழகன் மற்றும் திமுக தலைமைக் கழகத்திடம், வெளிவந்துள்ள தகவல்கள் பொய்யானவை என்று விளக்கம் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.