For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்.கே.கே.பி. ராஜா மீதான வழக்கு 'பைசல்'!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது தொடரப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பி.சி.பழனிசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரித்துக் கொண்டதாகவும், இதுதொடர்பான பிரச்சினையில் பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் ஆகியோரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக சிறை வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்று கோரி பழனிச்சாமியின் உறவினர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரிய கருப்பையா ஆகியோர் விசாரித்தனர்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பதில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் தங்கியிருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், பழனிச்சாமியின் தம்பி குகமணியும் காணாமல் போய்விட்டார். அவரையும் கடத்தி சட்டவிரோதமாக சிறை வைத்திருப்பதாகவும், அவரை மீட்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் என்பவர் மற்றொரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். குகமணியைத் தேடிக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் குகமணி ஆஜரானார்.

இந்த இரண்டு வழக்குகளிலும் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வெற்றிவேந்தன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 2 மாதத்திற்கு முன்பு கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தோம். இந்த வழக்கு தொடர்பாக பெருந்துறை நகர தி.மு.க. செயலாளர் கோபி என்பவரை கைது செய்திருக்கிறோம். அவர் அளித்த வாக்குமூலத்தில் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இளங்கோவன் சார்பில் வக்கீல் விஜயன், அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் குமரேசன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா சார்பில் மூத்த வக்கீல் அசோக்குமார், எதிர்மனுதாரர்கள் சார்பில் ராகவாச்சாரி, ஜான்சத்யன் ஆகியோர் வாதாடினார்கள்.

போலீஸ் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக 2 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று வக்கீல் விஜயன் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், சொல்ல வேண்டியதை வாய்மொழி மூலமே சொல்லலாம் என்று கூறினர். ஆனால் எழுத்துமூலம் கொடுக்க விரும்புவதாக வக்கீல் விஜயன் மேலும் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மீண்டும் விசாரணை நடந்தபோது போலீஸ் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போலீசார் இந்த வழக்கை சரிவர விசாரிக்கவில்லை. எனவே, சி.பி.ஐ.க்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட வேண்டும் என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த வக்கீல்கள் வாதம் முடிந்ததும் நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், பெரிய கருப்பையா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

இரண்டு ஆட்கொணர்வு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டதால் இந்த வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினால் அவர்கள் வசிக்கும் இடத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசு வக்கீல் உறுதி அளித்துள்ளார்.

எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை ஏஜென்சிக்கு மாற்ற வேண்டியது இல்லை. இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்கிறோம். இந்த கோரிக்கை, ஆட்கொணர்வு வழக்கிற்கு அப்பாற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மேலும் நிவாரணம் பெற விரும்பினால் உரிய அமைப்பை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X