கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த செல்வகணபதி
முன்னாள் அமைச்சரும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்த செல்வகணபதியை இரு தினங்களுக்கு முன் கட்சியிலிருந்து நீக்கினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து அவர் திமுக அல்லது தேமுதிகவில் இணையலாம் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் இன்று தனதுஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த செல்வகணபதி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த இணைப்பையொட்டி அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே மிகப் பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. செல்வகணபதியுடன் ஏராளமான அதிமுகவினரும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ. 10.61 கோடி கலர் டிவி ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல், சுடுகாடுகளுக்கு கொட்டை அமைப்பதில் ஊழல் ஆகியவற்றில் திமுக அரசால் ஜெயலலிதாவோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது.