சேது பந்த்: உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி பதில் மனு தாக்கல்
சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்து, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதி தமிழகத்தில், பந்த் நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், பந்த்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித் தது. அதையும் மீறி தமிழகத்தில் பந்த் நடந்தது.
தடையை மீறி பந்த் நடத்தப் பட்டதால், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலர், டிஜிபி, ஆகியோருக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அக்டோபர் முதல் வாரத்தில், தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தமிழக அரசு தரப்பிலும், முதல்வர் தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த 4ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதல்வர், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் ெதரிவித்தது. கைது வாரண்ட் பிறப்பித்து கோர்ட்டுக்கு வரவழைக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக, பந்த் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. அந்த தடையுத்தரவை நான் மீறவில்லை. அதை அமல்படுத்தும்படியே உத்தரவிட்டேன்.
இந்த விவகாரத்தில், மாநிலத்தின் தலைமைச் செயலரும், டி.ஜி.பி.,யும் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும். அந்த பதிலை நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதை ஏற்பதுடன், சுப்ரீம் கோர்ட்டின் மீது கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, நான் தனியாக என் பதிலை தாக்கல் செய்துள்ளேன்.
பந்த் நடத்தக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த உடனேயே, அந்த உத்தரவை செயல்படுத்தும்படி, அரசு அதிகாரிகளுக்கு நான் ஆணையிட்டேன்.
சேது சமுத்திர திட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக, ஜனநாயக முற்போக்கு கூட்டணி, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானித்தபோது, அந்த உண்ணாவிரதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது அல்ல. அரசியல் கட்சிகள் நடத்தும், அந்த போராட்டத்தினால், மக்களின் மாமூல் வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அந்த நேரத்தில் விளக்கம் அளித்தேன்.
என்னையும், தற்போதைய அரசையும் இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் மூலம் கோர்ட் அவமதிப்பு வழக்கை உருவாக்க தீர்மானித்துள்ளது.
உண்மையில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை நான் மீற வில்லை. அதற்கு மாறாக அதை அமல்படுத்தவே உத்தரவிட்டேன். அதுதான் உண்மை. சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீசுக்கு பதில் அளிக்க காலதாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். அது வேண்டுமென்றோ, கோர்ட்டை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ செய்யப்படவில்லை என்று அதில் கூறியுள்ளார் கருணாநிதி.
அமைச்சர் டி.ஆர்.பாலுவும் இதேபோன்ற விளக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.