என்எஸ்ஜி திருத்த வரைவறிக்கை தயார்: நாளை இந்தியாவுக்கு கிடைக்கும்
டெல்லி: அணு சப்ளை குழுமமான என்எஸ்ஜியிடம் வழங்கவுள்ள புதிய திருத்த வரைவறிக்கையை அமெரிக்கா தயார் செய்து விட்டது. நாளை இது இந்தியாவிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் என்.எஸ்.ஜி. கூட்டம் வியன்னாவில் நடந்தது. அப்போது பாதிக்கும் மேற்பட்ட நாடுகள், இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகள் வழங்க எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் அவை முன்வைத்தன.
இதையடுத்து வரைவறிக்கையில் திருத்தம் செய்ய இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்தன. இந்தப் பணியை அமெரிக்கா மேற்கொண்டது. தற்போது திருத்த வரைவறிக்கை தயாராகி விட்டது.
இந்த வரைவறிக்கை இந்தியாவிடம் நாளை தரப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவின் கவலைகளையும், என்.எஸ்.ஜி. உறுப்பினர்களின் கவலைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கைக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுளின் தூதர்களுடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் வியாழக்கிழமை பேச்சு நடத்தினார் என்பது நினைவிருக்கலாம்.