அமைச்சர் மீதான வழக்கு-சிபிசிஐடி விசாரிக்க மனு
சென்னை: தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மீதான புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தையடுத்த வடநெம்மேலி பகுதியைச் சேர்ந்தச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
நெம்மேலியில் உள்ள பொது இடத்தை விற்பனை செய்தது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், எனக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி காலை செல்போனில் தொடர்பு கொண்ட மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, குமாரிடம் எந்தவிதமான பிரச்சனையும் செய்ய வேண்டாம். மீறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.
மேலும் வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரும் இதுதொடர்பாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் அமைச்சர் என்பதால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கல்லை.
எனவே நான் கொடுத்த புகாரை போலீசாருக்கு பதிலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.