புதுவை- முதல்வரை வீழ்த்திய அமைச்சர்கள்!
புதுச்சேரி: வழக்கமாக தங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அமைச்சர்களைத்தான் முதல்வர்கள் தூக்குவார்கள். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக புதுச்சேரியில்தான் ஒட்டு மொத்த அமைச்சர்களும் புரட்சி செய்து, முதல்வரை பதவியிலிருந்து அகற்றியுள்ளனர்.
அமைச்சர்கள் யாரேனும் புரட்சி செய்தால், எதிர்ப்புக் குரல் கொடுத்தால் அவர்ளை பதவியிலிருந்து தூக்கி விடுவது முதல்வர்களுக்கும், பிரதமர்களுக்கும் இருந்து வரும் பழக்கமாகும். ஆனால் புதுச்சேரியில் இது உல்டாவாகியுள்ளது.
இங்கு முதல்வராக இருந்த ரங்கசாமியின் அமைச்சரவையில் இருந்த ஐந்து அமைச்சர்களும் அவருக்கு எதிராக கிளம்பினர். அவர்களை எதிர்த்துப் போராடிப் பார்த்த ரங்கசாமி கடைசியில் தோல்வியுற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இறுதியில் அமைச்சர்களே வென்றனர். அவர்களில் ஒருவர் தற்போது முதல்வராகவும் நிமிர்ந்துள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி அமைச்சர்கள் புரட்சி செய்து முதல்வரை பதவியிலிருந்து நீக்கியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதுதவிர புதுச்சேரி அரசியலில் கடந்த 1980ம் ஆண்டு இன்னொரு புதுமையான சம்பவமும் அரங்கேறியது.
அப்போது எஸ்.ராமசாமி தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 22 நாட்களே அந்த ஆட்சி நீடித்தது. 22வது நாளின்போது 3 உறுப்பினர்களை சபாநாயகர் பழனிராஜா சஸ்பெண்ட் செய்தார். பின்னர் மாலையே அந்த உத்தரவை வாபஸ் பெற்று அதிரடி செய்தார்.
இதற்கிடையே, புதுச்சேரியின் முதல்வராக செப்டம்பர் 1ம் தேதி பதவியேற்கவுள்ள வைத்திலிங்கம் யூனியன் பிரதேசத்தின் 15வது முதல்வர் ஆவார்.
1963ம் ஆண்டு புதுச்சேரி சட்டசபை உருவாக்கப்பட்டது. முதல் முதல்வராக 1963ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எட்வர்ட் கோபர்ட் பதவியேற்றார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வரை அவர் பதவியில் நீடித்தார்.
மற்ற முதல்வர்கள் விவரம் வருமாறு:
2. வெங்கடசுப்பா ரெட்டியார்.
3. எம்.ஓ.எச்.பாரூக்.
4. எஸ்.ராமசாமி.
5. எஸ்.ராமசாமி.
6. டி.ராமச்சந்திரன்.
7. எம்.ஓ.எச்.பாரூக்.
8. டி.ராமச்சந்திரன்.
9. வைத்திலிங்கம்.
10. ஆர்.வி.ஜானகிராமன்.
11. ப.சண்முகம்.
12. ப.சண்முகம்.
13. என்.ரங்கசாமி.
14. என்.ரங்கசாமி.