சசிகலாவின் கைப்பாவை ஜெ: செல்வகணபதி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் செல்வகணபதி நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவும், அவரை சுற்றியுள்ள பேராசை கூட்டமும் சேர்ந்து அதிமுகவை அழிவு பாதையில் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். எல்லாமே சசிகலாதான் என்று அதிமுக தள்ளப்பட்டு, அவரின் கைப்பாவையாக இருக்கிறார் ஜெயலலிதா. தகுதி இருந்தாலும் சசிகலாவின் தயவு இன்றி கட்சியில் பதவி கிடைக்காது.
ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியில், ஐந்தாறு மாவட்டங்களுக்கு ஒரு மண்டல இயக்குனர் இருப்பதை போல,
அதிமுகவில் சசிகலாவின் உறவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கலியமூர்த்தி,
சென்னை, திண்டுக்கல், மதுரைக்கு டாக்டர் வெங்கடேஷ், தென் ஆற்காடு, வட ஆற்காடுக்கு பழனிவேலு,
நெல்லைக்கு ராமச்சந்திரன், கோவை, ஈரோடு, ராமநாதபுரம் மற்றும் தெற்கு பகுதிகளுக்கு ராவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் இவர்களிடம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் கட்டளையை மீறி நடப்பவர்களுக்கு பதவிக்கு ஆபத்து. இவர்களுக்கு சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தவிர என்ன தகுதி இருக்கிறது?
அதிமுகவின் தலைமை அலுவலகம் ஒரு கம்பெனியின் கார்ப்பரேட் அலுவலகமாக மாற்றப்படுள்ளது. மூன்று தேர்தல்களில் வரிசையாக தோற்றது பற்றி பொதுக்குழு, செயற்குழுவில் விவாதிக்காமல், சம்பிரதாயமாக நடத்தப்பட்டன.
அதிமுகவில் எம்ஜிஆரும் புறக்கணிக்கப்படுகிறார். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான எம்ஜிஆர் சிலைகள திறக்கப்படாமல் உள்ளன. ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக எம்ஜிஆர் சிலை மூடியே கிடக்கிறது.
கடந்த 1998ம் ஆண்டு உட்கட்சித் தேர்தலில் நான் கோஷ்டி சேர்த்ததாக, எடப்பாடி பழனிச்சாமி பொய் புகார் கொடுத்தார். அதில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று மதுசூதனன் தலைமைக்கு எடுத்துக் கூறியும், நான் வகித்த மாநில அமைப்புச் செயலாளர், தொண்டரணிச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன்.
கட்சி பிரச்சனைக் குறித்து ஜெயலலிதாவை சந்தித்து மாவட்டச் செயலாளர்கள் கருத்துக் கூற முடியாத விசித்திர நிலை உள்ளது. என்னை இளம் வயதிலேயே நாட்டுக்கு அடையாளம் காட்டிய தலைமை என்ற நன்றியால் இவ்வளவு அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டேன்.
ஆனால் குட்ட குட்ட குனிபவனும் முட்டாள், குனிய குனிய குட்டுபவனும் முட்டாள். அதிமுகவில் உழைப்பவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இடமில்லை. இதுகுறித்து ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.
தவறான போக்கில் செயல்படும் தலைமைக்கு உழைத்து, ஒரு கும்பல் பயனடைவதற்காக அதிமுகவினர் உங்கள் உழைப்பை வீணடித்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் செல்வகணபதி.