தமிழகத்தில் டீசல் வினியோகம் சீராகிறது: திரிபாதி
சென்னை:தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டீசல் வினியோகம் அதிகரித்துள்ளதாக தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் டீசலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடர்கிறது.
டீசல் தட்டுப்பாடு தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்தன. டீசல் தட்டுப்பாடு காரணமாக காய்கறி விலைகளும் எகிறின.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருகை உள்ளிட்ட காரணங்களால் டீசல் நுகர்வு அதிகரித்துள்ளதால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஐடி நிறுவனங்கள் மிக அதிக அளவில் உள்ள பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்படாத டீசல் தட்டுப்பாடு சென்னையில் மட்டும ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அரசு தரப்பிலோ, பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பிலிருந்தோ இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலைமை சீரடைந்து வருகிறது. டீசல் விநியோகம் அதிகரித்து வருகிறது என்றார்.
தமிழகத்தில் மட்டும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.