கோளாறு: வழியில் நின்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ்
சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது.
எழும்பூரில் இருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் நள்ளிரவு 1 மணி அளவில் திருச்சி அருகே லால்குடியில் சென்று கொண்டிருந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்றடைந்த ரயில் காலை 6 மணிக்குப் பதிலாக 10 மணிக்குதான் மதுரையை அடைந்தது.
நடுவழியில் ரயில் நின்றதால் காலையில் பசியில் அழுத குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் கூட எதுவும் வாங்க முடியாமல் பயணிகள் திணறினர். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் டிஐஜி சிவனாண்டி ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக ரயிலில் பால் சப்ளை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து ரயில்வே போலீசார் பிளாஸ்க்குகளில் பால் கொண்டு வந்து குழந்தைகளுக்கு வழங்கினர். சபாஷ் போலீ்ஸ்!