மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம்: அரசு தீவிர முயற்சி
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மாநிலம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் அமல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டால் மக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர்.
சென்னையில் ஒரு மணிநேரமும், மற்ற மாவட்டங்களில் தினமும் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டாலும், கூடுதலாகவே மின் விநியோகம் இருப்பதில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்ைக எடுத்து வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறைந்தபட்சம் 200 மெகாவட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து வாங்குவதற்கு மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதில் 100 மெகாவாட் மின்சாரமாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட், வழக்கமான பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த யூனிட்டின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது. இதனால் மேலும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
தவிர, கூடுதல் விலை கொடுத்தாவது மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கலாமா என்று மின்வாரியம் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.