For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மராத்தான் ஓட்டத்தில் பரிதாபம்: மாணவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Santhosh
சென்னை: சென்னையில் இன்று நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர், பந்தயத்தின் இறுதியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்எஸ்சி விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். சந்தோஷ், தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து திருவல்லிக்கேணியில்உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்தார்.

சென்னையில் இன்று நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள சந்தோஷ் விண்ணப்பித்திருந்தார். அதன்படி இன்று காலை சென்னை தீவுத்திடலில் இருந்து பெசன்ட் நகர் வரை சென்று, காமராஜர் சாலை காந்தி சிலை அருகே முடிவடையும் 21 கிலோ மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டார்.

அவர் காந்தி சிலை அருகே பந்தயம் முடிவடைய இருந்த இடத்தில் வந்தபோது சந்தோஷ் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார்.

இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சந்தோஷை ராணி மேரிக் கல்லூரிக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சந்தோஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த துயரச்சம்பவம் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த சந்தோஷின் பெற்றோர் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னைக்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து மெரீனா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தோஷ் - ப்ரீஜா ஸ்ரீதரன் வெற்றி

இந்த நிலையில், சென்னை மராத்தான் போட்டியில்,ஆடவர் பிரிவில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷும், மகளிர் பிரிவில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை ப்ரீஜா ஸ்ரீதரனும் வெற்றி பெற்றனர்.

மார்க் கிப்லைவ் நடத்திய இந்த மராத்தான் போட்டியில், மொத்தம் 21.09 கிலோமீட்டர் தூரத்தை போட்டியாளர்கள் கடக்க வேண்டியிருந்தது. இதில் ஆடவர் பிரிவில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்த இடத்தை அதே மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் பெற்றார். இவர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், 10 ஆயிரம் மீட்டர் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி தூரத்தை 1 மணி நேரம் 04 நிமிடங்கள் 3 விநாடிகளில் கடந்தால் சந்தோஷ். அடுத்த இடத்தில் வந்த சுரேந்திர சிங், 1:04.5 என்ற கணக்கில் தூரத்தைக் கடந்தார். 3வது இடத்தை உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் 1:05.01 என்ற நேரத்தில் கடந்தார்.

மகளிர் பிரிவில், ப்ரீஜா ஸ்ரீதரன் 1:18.30 என்ற கணக்கில் கடந்த முதலிடத்தைப் பிடித்தார். 2வது இடத்தில் ப்ரீத்தி ராவ் 1:18.32 என்ற நேரத்தில் கடந்தார். மூன்றாவதாக வந்த கவிதா ராட் 1:19.20 என்ற கணக்கில் வந்தார்.

இருவருக்கும் தலா ரூ. 10லட்சம் பரிசு கிடைத்தது. பரிசினை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் வழங்கினார். சான்றிதழையும் அவர் வழங்கினார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில், இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X