ரூ.4,000 கோடியில் திருவள்ளூரில் டயர் ஆலை - அரசு
சென்னை: திருவள்ளூரில் மாவட்டத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலை நிறுவுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 16 முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிச்சலின் நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் டயர் உற்பத்தி தொழிற்சாலைக்கும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.350 கேடி முதலீட்டில் கட்டுமான இயந்திரங்கள் மற்றும் இயந்திர கருவிகள் தயாரிக்கும் தூசான் இன்ப்ராகோர் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் ரூ.4,150 கோடி முதலீட்டில் மோட்டார் வாகன திட்டங்கள் அமைப்பதற்காகக அசோக் லேலண்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகளில் சில மாறுதல்கள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் ரூ.1,500 கோடி முதலீட்டில் எண்ணெய் மற்றும் வாயு துரப்பண சாதனங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவைகளை தயாரிக்கும் ஹர்ஷா நிறுவத்தின் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
சென்னை அருகில் ஒரக்கடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.250 கோடி முதலீட்டில் மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு மின்னணு சாதனங்களை தயாரிக்கும் அமெரிக்காவின் டெல்பி நிறுவத்திற்கு அனுமதி வழங்குப்படும்.
திருச்சி மாவட்டத்தில் ரூ.2,512 கோடி முதலீட்டில் கொதிகலன்கள், மின் உற்பத்தி இயந்திரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக செதார் வெசல்ஸ் நிறுவனத்தின் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் ரூ.460 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த காஸ்டிக் சோடா ஆலை மற்றும் இரும்பு ஆக்ஸைடு, கால்சியம் குளோரைடு போன்றவை தயாரிக்கும் டிசிடபிள்யு நிறுவனத்தின் தொழிற்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி ஆய்வு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்ய ஆணை வெளியடப்பட்டதற்கு பின்னேற்பு வழங்கப்படும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தவதற்காக ஒரு நபர் குழு, சில கல்வியாளர்களை இணைத்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள சமச்சீர் கல்விமுறையை அறிந்து வந்து பரிந்துரைப்பார்கள். அதை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்திய ஆட்சிப் பணி நிலை பிரிவின் தமிழகத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட பதவிகளின் மொத்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற முந்தைய ஆட்சியின் அமைச்சரவை மேற்கொண்ட முடிவு கைவிடப்படும். தற்போது மத்திய அரசு அந்த எண்ணிக்கையை 325ல் இருந்து 355ஆக உயர்த்தியுள்ளதை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு சிறப்பு தொகுப்புச் சலுகை:
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு சிறப்பு தொகுப்புச் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.