முஷாரப் போன பின் ஆபத்து அதிகரிப்பு: நாராயணன்
தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார் நாராயணன். இதுகுறித்து அவர் கூறுகையில், முஷாரப் அதிபர் பதவியில் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருந்தன. இதனை மேலும் பலப்படுத்த, சிறந்த நிர்வாகத் திறனும், தைரியமும் தேவைப்படுகிறது.
காஷ்மீர் விவகாரம் என்பது அவ்வளவு சுலபமாக தீர்க்கக் கூடியதல்ல. பாக்.,கின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, தனது முதல் முயற்சியாக இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்பார் என்று எதிர்பார்க்கலாம்.
பாக்.கின் ராணுவ தளபதி கியானி எல்லோராலும் பாராட்டப்படும் நபர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ., போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த அவரும் தவறிவிட்டார்.
கடந்த சில மாதங்களாக, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன. அல் கொய்தா பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், லஷ்கர்-இ- தொய்பா அமைப்புடன் அல் கொய்தா ஐக்கியமாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதன் விளைவாக, இன்று பல பயங்கரவாத அமைப்புகள் உருவாகி, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. முஷாரப் அதிபராக இருந்தபோது, சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் குறைவாக இருந்தன. பலமுறை அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது என்றார் அவர்.