விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பீரங்கி பறிமுதல்!
விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை தொல்லியல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதி பெறாமல் கோட்டையில் இருந்து எடுத்து வரப்பட்டதுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தியாகதுருக்கம் கோட்டை. இந்தக் கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையை நடந்த போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று இருந்தது.
இந்த பீரங்கியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் எஸ்.பி. அமல்ராஜ் தமது அலுவலகத்திற்கு வைத்துக் கொள்வதற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எஸ்.பி. அலுவலக நுழைவு வாயிலில் தனி மேடை அமைத்து அந்த பீரங்கி கம்பீரமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பீரங்கி திடீரென காணமல் போனது. தகவலறிந்த எஸ்.பி. அமுல்ராஜ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது, அந்த பீரங்கியை தொல்லியல்துறை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் கொண்டு வந்ததால் அதை அவர்கள் மீட்டுச் சென்றதாக தெரிய வந்தது.