காதர் மொய்தீன் எம்.பி பதவியில் நீடிக்க தடை கோரி வழக்கு
சென்னை: இந்திய யூனியன்முஸ்லீம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. பதவியில் நீடிப்பதை எதிர்த்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தாவூத் மியா கான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக மியா கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் திமுக சார்பில் அதன் சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய துணைத் தலைவராகவும் காதர் மொய்தீன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு அரசியல் கட்சியாகும். ஏற்கனவே திமுக கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மற்றொரு கட்சியில் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 10க்கு எதிரானது. 2 கட்சிகளில் ஒருவர் செயல்பட முடியாது.
எனவே, அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்து விட்டார்.
சபாநாயகரின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான் கொடுத்த மனுவை மீண்டும் பரிசீலிக்க சபாநாயகருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.