டாடா நானோ ஆலை நீடிக்க மே. வங்க மக்கள் விருப்பம்: சர்வே
மும்பை: மேற்கு வங்கத்தில் டாடாவின் நானோ தொழிற்சாலை திட்டம் நீடிக்க வேண்டும் என அம்மாநில மக்கள் கருதுவதாக என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்டிடிவி தொலைக்காட்சிக்காக ஜிஎப்கே-மோட் நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1525 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது நடத்தப்பட்டது.
இவர்ளில் 75 சதவீதம் பேர் டாடாவின் நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திற்கு வந்திருப்பது மாநிலத்திற்கு நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடந்து, நானோ ஆலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்காக 1000 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் 400 ஏக்கர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் 63 சதவீதம் பேர், மம்தா பானர்ஜி சமரசத்திற்கு உடன்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 3ல் 2 பங்கு பேர் டாடா நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
நானோ ஆலைக்கு சிங்கூர்தான் பொருத்தமானது என்று 68 சதவீதம் பேரும், இல்லை என்று 59 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.