தமிழக அரசு-டாடா இணைந்து மீனவ பயிற்சி மையம்
சென்னை: முட்டுக்காட்டில் மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தமிழக அரசும், டாடா நிறுவனமும் கையெழுத்திட்டன.
மீனவர்களுக்கு மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், நண்டு வளர்த்தல், மீன் பதப்படுத்துதல், கடல் பாசி வளர்த்தல் மீன் உணவு தயாரித்தல் போன்றவற்றில் புதிய யுத்திகளுடன் கூடிய பயிற்சி அளிக்க நவீன மீன்பிடி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இத்திட்டத்தை நிறைவேற்ற மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம் (ஃபிட்) என்ற அமைப்பு கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை அமைக்க முட்டுக்காடு கிராமத்தில் 1.16 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த பயிற்சி நிலையத்தை அமைத்து, அங்கு செயல்படுத்தும் திட்டத்திற்கு லாப நோக்கம் இல்லாமல் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய டாடா குழுமம் முன்வந்துள்ளது.
இதையடுத்து டாடா குழுமத்துடன் அரசுன் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. அரசின் சார்பில் மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயரும், டாடா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் கிருஷ்ணகுமாரும் கையெழுத்திட்டனர்.
மீனவ தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிலையத்தின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிப்பணிக்குரிய செலவுகளுக்காக முதல் கட்ட உதவி நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஃபிட் சங்கத்தின் கவுரவ தலைவரும், மீன் வளத்துறையின் முதன்மை செயலாளருமான லீனா நாயரிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, கனிமொழி எம்பி, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.