ஜாதி வெறி: தாழ்த்தப்பட்ட சிறுமியை மலம் அள்ள வைத்து சித்திரவதை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் ேசர்ந்த சிறுமியை மலம் அள்ள வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துறையில் ஈடுபட்டு வரும் இவர்களது நிலங்களை அதே கிராமத்தில் வசிக்கும் இன்னொரு சாதியினர் மிரட்டி அபகரித்து வருவதாக இம்மக்கள் புகார் கூறியுள்ளனர்.
திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர், தங்களது நிலம் மற்றும் போக்குவரத்து சாலைப் பகுதியை முள் வேலி போட்டு அந்த சாதியினர் தடுப்பதாக புகார் கூறினர்.
மேலும், பல்லாண்டு காலமாக தாங்கள் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்த அவர்கள், தேநீர் கடைகளில் சமமாக தேநீர் தர மறுப்பது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, ஊர்ப் பஞ்சாயத்து என்று கூறி சரமாரியாக தாக்குதல் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் தாங்கள் தினந்தோறும் வேதனை அனுபவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
இக்கொடுமைகளின் உச்சமாக, சமீபத்தில் அருந்ததியர் காலனிக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் மலம் கழிக்கச் சென்ற 7 வயது சிறுமியை மிரட்டி, அவளது கையாலேயே மலத்தை அள்ள வைத்த கொடுமையையும் சாதி வெறியர்கள் அரங்கேற்றியதாக அம்மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பல புகார்களை காவல் நிலையத்தில் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.