ஹோமோ செக்ஸுக்கு சட்ட அங்கீகாரம்: அன்புமணி தகவல்
பெங்களூர்: ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எய்ட்ஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெங்களூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவறான செக்ஸ் காரணமாகவே முக்கியமாக எய்ட்ஸ் பரவுகிறது. ஆண்களுக்கிடையே நிலவும் ஓரினச் சேர்க்கை பழக்கம் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.
தவறான செக்ஸ் மூலமாக 86 சதவீதம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கி விட்டால், இந்தப் பழக்கத்தால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற தயங்காமல் முன் வருவார்கள். இந்தப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து அதை கைவிடவும் துணிவார்கள்.
ஓகனேக்கலில் அரசியல் வேண்டாம்:
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என கர்நாடக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
பாதுகாப்பான குடிநீருக்கான திட்டம் இது. இந்தத் தண்ணீர் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.
காவிரியில் தனது பங்கு நீரிலிருந்துதான் இந்தத் திட்டத்ைத தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது. கர்நாடக பங்கு நீரை அது தொடப் போவதில்லை.
கடந்த 50 ஆண்டுகளாக இது நிலுவையில் இருந்து வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களுக்காக தீட்டப்பட்ட நல்ல திட்டம் இது. இங்கு நிலத்தடி நீர் குடிக்க இயலாத அளவுக்கு மாசுபட்டுள்ளது என்றார் அன்புமணி.