அக். 2 முதல் அலுவலகங்கள்-ஹோட்டல்களில் புகை பிடிக்க தடை
பெங்களூர்: அக்டோபர் 2 முதல் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில்,
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் அலுவலகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் அன்று முதல் புகை பிடிக்க கூடாது. அப்படியே புகை பிடிக்க விரும்புவர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி வெளியில் போய்த்தான் புகை பிடிக்க வேண்டும்.
ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். இனிமேலும் நிறுவனங்களில் புகை பிடிப்பதெற்கென தனி இடங்களை ஒதுக்க முடியாது.
சிறு ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள், பப்கள், டிஸ்கோ அரங்குகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். 30 இருக்கைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் புகை பிடிப்பதற்கென தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். அங்கு போதிய காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
புகை பிடிக்கும் தடையை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் தற்போது விதிக்கப்படுகிறது. இதை தனி நபர்களுக்கு ரூ. 1,000 ஆகவும், அதை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்த பரிசீலித்து வருகிறோம்.
புகை பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படும். இதுதொடர்பான விளம்பரங்களுக்கு பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்தப்படுவர்.
மேலும் அனைத்து புகையிலை தயாரிப்புகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் படத்துடன் கூடிய எச்சரிக்கை வாசகமும் இடம் பெறும். இதுதொடர்பாக புகையிலை பொருள் தயாரிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாத கால அவகாசமும் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.