நானோ ஆலை: மே. வங்கத்துக்கு டாடா, 'டாடா'!
இனி இந்த கார் சிங்கூரில் தயாரிக்கப்படாது என்றும், தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளால் வெறுத்துப் போன டாடா நிறுவனம் கடந்த 3 நாட்களுக்கு முன் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தியது.
நிலைமை சரியானால் மட்டுமே மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கும் என அறிவித்தது.
ஆனால், தொடர்ந்து மம்தாவும் அவரது கட்சியினரும் தொல்லை தந்து வருவதால், இனியும் அங்கு செயல்படுவதி்ல்லை என்றும், தொழிற்சாலையை அங்கிருந்தே மாற்றிவிடுவது என்ற இறுதி முடிவுக்கும் டாடா நிறுவனம் வந்துவிட்டது.
முன்னதாக நேற்று ரத்தன் டாடா தலைமையில் டாடா மோட்டர்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடந்தது. அதில் சி்ங்கூரை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து டாடாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இப்போதைய சூழலில் நானோ தொழிற்சாலையை பிரச்சினையின்றி இயக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது.
நாங்கள் இந்தத் தொழிற்சாலையை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்தது இந்த மாநிலத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும்தான். ஆனால் இந்த மாநில மக்கள் ஆதரவு இல்லாமல் அது நடக்க வாய்ப்பே இல்லை.
நானோ தொழிற்சாலையைச் சுற்றிலும் இன்றைக்கு நிலவும் சூழல் மோசமாக உள்ளது என்றார்.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக டாடாவின் ஒரு லட்ச ரூபாய் மக்கள் கார் நானோ அக்டோபரில் விற்பனைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.
நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துக்கு 997.11 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கொடுத்தது மேற்கு வங்க அரசு. இதில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை அத்துமீறி அரசு எடுத்துள்ளதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு தொழிற்சாலை, வேறு மாநிலம்...:
இதையடுத்து புனேவில் டாடாவின் நானோ தொழிற்சாலை அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.