பட்டா- தலித் மக்களின் 50 ஆண்டு போராட்டம்
அரியலூர்:அரியலூர் அருகே நிலப்பட்டா வழங்காததை கண்டித்து தலித் மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
அரியலூர் அருகே உள்ளது காட்டுப்பிரியங்கம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் நிலமற்ற ஏழை தலித் விவசாயிகளுக்கு மறுவாழ்விற்காக விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது.
மேலும் பாசன வசதிக்காக கிணறு அமைக்க, பம்செட் அமைக்க உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலத்தை கடந்த 50 ஆண்டுகளாக சீர் செய்து நெல், கம்பு, சோளம் போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த விவசாய நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று தலித் கிராம மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.
ஆனால் இதற்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் இல்லை.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுவதுடன், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் திருப்பிக் கொடுக்க இந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.