மும்பை பதிப்பை தொடங்கும் தினத்தந்தி-தினகரன்
முன்னணி தமிழ் நாளிதழ்களான தினத்தந்திக்கும், தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந் நிலையில் மும்பையில் தனது பதிப்பை தொடங்கப் போவதாக தினத்தந்தி சமீபத்தில் அறிவித்தது. நாளை தினத்தந்தியின் மும்பைப் பதிப்பு தொடங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தினகரனும் தனது மும்பை பதிப்பைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதுவும் நாளையே தனது மும்பைப் பதிப்பைத் தொடங்குகிறது. சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் 11வது பதிப்பாக தனது மும்பைப் பதிப்பை தொடங்குகிறது.
இதுகுறித்து தினகரன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் விஜய் பாபி கூறுகையில், மும்பை பதிப்பு எங்களது 11வது பதிப்பாகும். அனைத்துப் பக்கங்களும் வண்ணத்தில் மிளிரும் வகையில் இந்த மும்பை பதிப்பு வெளியாகவுள்ளது.
50,000 பிரதிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மும்பை பதிப்பு தொடங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தினகரன் நாளிதழ் சமீபத்தில் 10 லட்சத்து 12 ஆயிரத்து 243 பிரதிகளைத் தொட்டது என்பது நினைவிருக்கலாம்.
தினகரன் நாளிதழ் மும்பை பதிப்பைத் தொடர்ந்து புனேவிலும் ஒரு பதிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், தினத்தந்தி, தலைநகர் டெல்லியில் தனது பதிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பல காலமாகவே தமிழில் விற்பனையில் தினத்தந்தி தான் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.