வைகை அணை நிரம்புகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை
{image-Vaigai Dam (1)250_04092008.jpg tamil.oneindia.com}ஆண்டிப்பட்டி: வைகை அணை தனது முழுக் கொள்ளவை எட்டி வருவதால் அணை அடுத்த சில தினங்களில் எந்த நேரமும் திறக்கப்படவுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீர் வழங்கும் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126 அடியை நேற்று எட்டிவிட்டது. மஞ்சளாறு அணையும் நிரம்பி வருகிறது.
வருசநாடு, வெள்ளி மலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதே போல 71 அடி உயரம் கொண்ட வைகை அணையிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.8 அடியாக உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரும் வந்து கொண்டிருப்பதால் அணைக்கு வினாடிக்கு 1,559 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது.
நீர் மட்டம் 68 அடியை நீர்மட்டம் எட்டியவுடன் 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் அணை இன்றே நிரம்பிவிடும் எனத் தெரியவதால் இன்று மாலையே இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனத் தெரிகிறது. இந்த எச்சரிக்கை விடப்பட்டால் எந்த நேரத்திலும் அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும்.
இதனால் வைகை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதோடு ஒலி பெருக்கிகள் மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொன்விழா கொண்டாட்டத்துக்கு அணை தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் அணை தனது முழு அளவை எட்டியுள்ளது தென் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.